Friday 12 June, 2009

கிரிக்கெட்டில் இனிப் பார்வையாளர்களும் களத் தடுப்பு(ஃபீல்டிங்) செய்யலாமோ!?

.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் என்ற வீரர் ஒரு சாகசம் நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய சாகசம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கிடைக்க வேண்டிய 6 ஓட்டங்களுக்குப்பதிலாக 3 ஓட்டங்களே கிடைத்தது. போட்டியைப் பார்த்தவர்களுக்கு நடந்தது என்ன எனத் தெரியும். இருப்பினும் நிகழ்ந்ததை விவரிக்கிறேன்.

போட்டியில் இலங்கையின் இலக்கைத் துரத்திக் கொண்டு மேற்கிந்திய வீரர்கள் தங்கள் மட்டை விளாசலைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவ்வணியின் முன்னாள் தலைவர் ரம்நரேஷ் சர்வன் தன்னை நோக்கி வீசப்பட்டப் பந்தினை தூக்கி அடித்தார். பந்து, மைதானத்தின் எல்லையை நோக்கி வானில் பறந்தது. எல்லையைத் தாண்டினால் ஆறு ஓட்டங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எல்லைப் பகுதியில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ், பந்து எல்லையைத் தாண்டிவிடும் முன் தடுக்க எண்ணி ஓடினார். எம்பிக் குதித்துத் தடுக்கவும் செய்தார், எல்லைக் கோட்டின் அருகாமையில்.ஆனால், அவரின் தடுப்பையும் மீறி பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி வானில் பறந்தது. அவ்வீரரும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது, எம்பிய வேகத்தில் எல்லைக் கோட்டைத் தாண்டிப் போய் விட்டார்.(தரையில் எல்லைக் கோட்டினைத் தாண்டி அவர் கால்கள் பட்டன..)


உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், மீண்டும் வானில் மீண்டும் எம்பிக் குதித்து, பந்தினை எல்லைக்கப்பால் பூமியில் விழும் முன்னர், விளையாட்டு மைதானத்தின் எல்லைக்குள் தள்ளினார். இப்போது மட்டை விளாசும் அணிக்கு ஆறு ஓட்டங்கள் தர வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் நடுவர்களுக்கு ஏற்பட்டது. சில நிமிட சிந்தனைக்குப் பிறகு கள நடுவர், மூன்றாம் நடுவரை கலந்தாலோசித்து விட்டு, பந்து தடுக்கப்பட்டதால் 3 ஓட்டங்கள் மட்டுமே வழங்கப்படுவதாக அறிவித்தார்.

இங்கேதான் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கத் தோன்றியது. பந்து களத்துக்கு வெளியே சென்று விட்டது. வீரரும் சென்று விட்டார். வீரரின் கால்கள் மைதானத்தின் எல்லைக்கப்பால் பட்டு விட்டது. அதன் பின்னர், அவர் மைதானத்துக்குள் திரும்பி வரும் முன்னரே, பந்தினை உள்தள்ளியிருக்கிறார். அவரை எப்படிக் களத் தடுப்பு வீரராகக் கருதுவது..!?

கிரிக்கெட் பார்க்கும் அனைவரும் அறிந்த விவரம் என்னவென்றால், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில், வீரர்கள் வட்டத்துக்குள் குறிப்பட்ட ஓவர்கள் வரை நிற்க வேண்டும்.. அந்தக் குறிப்பிட்ட ஓவர்களுக்கு மேல் வட்டத்துக்கு வெளியில் குறிப்பிட்ட அளவு வீரர்கள் இருந்தேயாக வேண்டும் என்றெல்லாம் விதிகள் வகுத்துக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு.. அப்படியான விதிகளில் தவறு நிகழ்ந்தால், வீசப்பட்ட பந்து கணக்கில் கொள்ளப்படாமல், உதிரி ஓட்டங்கள் தருவதும், அந்த பந்தில் மட்டை விளாசி ஓட்டங்கள் எடுக்கப்பட்டால் கணக்கில் எடுத்துக் கொள்வதுமாகவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகிறது.

அப்படியிருக்க, மைதானத்தின் எல்லையைத் தாண்டிவிட்ட ஒரு வீரர், மீண்டும் மைதானத்துக்குள் திரும்பாமல் பந்தினைத் தடுப்பதை எப்படிக் களத்தடுப்பாகக் கொள்வது..!? மைதானத்திற்குள் அவர் மீண்டும் திரும்பாத நிலையில் அவர் பார்வையாளர் கூட்டத்தில் ஒருவராகத்தானே கருதப்பட வேண்டும்...!? பிறகு எப்படி இப்படி ஒரு முடிவு..!? யார் கண்டது, இனி ரசிகர்களும் கூடக் களத் தடுப்பு செய்யலாம் என புது விதி கொண்டு வந்தாலும் வருவார்கள், கிரிக்கெட் விளையாட்டு அமைப்பின் உலக நிர்வாகிகள். :) ஆனால், அந்த சாகசம் நிகழ்த்திக் காட்டிய வீரரின் சாகசம் காண்கையில் ரசிக்கும்படியாகவே இருந்தது. வாழ்த்துகள் அவ்ருக்கு.


.

Thursday 11 June, 2009

மனதின் வார்த்தைகள்...

"என்னடா சொல்ற..!? இல்லையே.. என்கிட்ட சிரிச்சுதானே பேசினா.. நான் கையெழுத்து போட்டதே அவள் மேசையில் வச்சுதானே.. என்னவோ அழகாய் விவரிச்சு சொல்லிட்டிருந்தா.., நான் தான் ஏதோ யோசனையாய் அதை கவனிக்கல.. நீ சொல்றதப் பார்த்தால்... ம்ஹூம்.. என்னால நம்ப முடியலையே..” குமார் கண்ணனிடம் தன் நம்ப இயலாமையை வெளிப்படுத்தினான்.

“ம்...அப்போ அவளுக்கு நிறமாய், அழகாய் இருக்கிற ஆட்கள்கிட்டேதான் பேசத் தோணும்போல.. நான் கறுப்பு என்பதுதான் பிரச்சனையாய் இருக்கும். என்னைக் கண்டாலே எரிஞ்சு விழறா..” என்றான் கண்ணன்.

கண்ணன், குமார் இருவரும் ஒரு கட்டிடக் கட்டுமான நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். அது அவர்கள் நண்பன் உதயனின் தந்தையின் நிறுவனம்தான். மூவருமே கட்டிடப் பொறியாளருக்குப் படித்தவர்கள்தான் என்றபோதும், கண்ணன் குடும்ப சூழ்நிலைகளினால் படிப்பை முடிக்க முடியாமல் போனது.

அதனால், உதயன் நிறுவனத்தை கவனிக்க, குமார் பொறியாளராக இருக்க, கண்ணன் தள மேற்பார்வையாளராக இருந்தான்.

கல்லூரிக் காலம் தொட்டு நண்பர்கள் மூவரும் தொடர்பிலேயே இருந்து வந்த போதும், கண்ணன், உதயன், குமாரை விட இரு வயது மூத்தவன் என்பதாலும், தந்தையின் உடல்நிலை மோசமான காரணமாய் வைத்தியத்திற்காய் அங்குமிங்கும் அழைத்துச் சென்றும், அவர் இறந்து சில மாதங்களே ஆகியிருந்ததாலும், உதயனின் நிறுவனத்தில் கண்ணன் வேலைக்கு சேர்ந்து வெகு சில மாதங்கள்தான் ஆகிறது.

வேலைக்கு வந்த இடத்தில், கண்ணனுக்குப் பிறகு உதயனின் செயலாளராய் வேலைக்கு சேர்ந்த கீதாதான் அவனைக் கண்டாலே எரிந்து விழுவதாய் இருந்தாள். கண்ணனுக்கு அவளைப் பார்க்கும் போதெல்லாம் அன்றைக்குதான் பூத்த புது மலராய் தெரிவாள். பார்த்தவுடன் அவன் உதடுகள், கண்களோடு இணைந்து மெல்லிய புன்னகை பூக்கும். ஆனால், அவளோ அவனில் குறை கண்டு சொல்லிக் கொண்டே இருப்பாள்.

இன்றைக்குக் காலையில் கூட அப்படித்தான் நிகழ்ந்தது. காலையில் தளத்திற்கு வரும் முன் அலுவலகம் சென்று கையொப்பம் இடுகையில் 15 நிமிடத் தாமதமாகி இருந்தது. உதயனிடம் அலைபேசியில் தான் வரத் தாமதம் ஆகும் விவரத்தினை அவன் தெரிவித்தும் இருந்தான் என்பதால், 15 நிமிடத் தாமதம் எனத் தெரியும்படியாகவே கையொப்பமிட்டிருந்தான்.

உதயன் வேறு தளமொன்றினைப் பார்வையிட சென்று விட்டதால், வருகைப் பதிவேடு கீதாவின் மேசைக்குப் போக, அவனின் தாமதம் அறிந்து, “ வேலைக்கு இப்படித் தாமதமாக வந்தால் எப்படி..!? ஒழுங்காய் வேலை செய்யும் எண்ணம் இல்லையோ..!? “ எனக் கேட்டாள்.

அவளுக்குப் பதில் சொல்லாமல், பதிவேட்டில் அவனுக்கு அடுத்துக் கையொப்பமிட்டிருந்த சிலரின் பெயர்களைப் பார்த்துவிட்டுக் கண்கள் விரிய அவளைப் பார்த்தான் அவன்.

“ என்ன பார்வை..!? பதில் சொல்லுங்கள்.. இப்படியே தாமதமாக வந்தால் வேலை எப்படி நடக்கும்..!? நான் பாஸிடம் புகார் செய்யப் போகிறேன் இதை“ என்று சற்று கோபத்தை அதிகப்படுத்திப் பேசினாள்.

அவளை சிறுபிள்ளை போல் நோக்கிய கண்ணன், தொண்டையை கணைத்துக் கொண்டு, குரலை சற்று மட்டுப்படுத்தி “ நான் உதயன் சாரிடம் அனுமதி பெற்றிருந்தேன் மேடம். ஆனால், நீங்கள் அவரிடம் இவ்விவரம் எடுத்துச் செல்ல வேண்டாம். ஏனென்றால், எனக்குப் பிறகு கையொப்பம் இட்டிருப்பவர்கள் செய்திருக்கும் காரியம் நீங்கள் கண்டுகொள்ளவில்லை என உங்களுக்குதான் திட்டு விழும் மேடம்.. சரிதானா மேடம்..!? நன்றாக பாருங்கள் மேடம்.. அது குறித்து ஏதேனும் செய்ய முடிந்தால் செய்யுங்கள் மேடம். நான் தளத்துக்குப் போக வேண்டும், வருகிறேன் மேடம்..” எனக் கண்களால் சிரித்து, உதட்டை ஒரு போல குவித்துக் காட்டிவிட்டுப் போனான்.

திமிர்.. திமிர்... பெரிய மன்மதன் என நினைப்பு.. அழகுக் காட்டுகிறானே.. மேடம், மேடம் என ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் முட்டாள் என சொல்வது போல, தன்னைப் பார்த்து அவன் நகைத்தது புரிந்து போக, பதிவேட்டினைப் பார்த்தாள் அவள். அப்போதுதான், கண்ணனுக்குப் பின் கையொப்பமிட்டிருந்த சிலர் செய்த காரியம் தெரிய வந்தது. அனுமதி பெற்று தாமதமாக வந்தவன், தான் வந்த நேரத்தை சரியாக இட்டிருக்க, அவனுக்குப் பிறகு வந்த் மற்றவர்களோ, மேலே கவனிக்காமல், தாங்கள் சரியான நேரத்துக்கு வந்ததாக எழுதிக் கையொப்பமிட்டிருந்தார்கள். அவளோ அதைக் கவனிக்காமல், இவனை அழைத்துக் கண்டித்திருக்கிறாள்.. பிறகு, அவன் சிரிக்க மாட்டானா..!?

இப்படியாக இவள் இங்கு சிந்தித்துக் கொண்டிருக்க, தளத்தில் குமார், கண்ணனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான்..” என்னடா மச்சி என்ன பிரச்சனை..!? எப்போதும் கருப்பு என உன்னைத் தாழ்த்தி நீ சொல்லிக் கொண்டதில்லையே.. இப்போது என்ன வந்ததாம்..!? நானும், உதயனும் கூட நல்ல நிறம் தான்.. அழகுதான்.. இல்லையென சொல்லவில்லை.. தற்பெருமை என நினைக்காதே.. நான் இதைச் சொல்வதே, நீ எங்கள் இருவரையும் விட கம்பீரமானவன், அழகானவன் என சொல்லதான்.. உன் கருப்புதாண்டா உனக்கு அழகு. நீ மட்டும் சிரித்தால் இந்த கீதா என்ன, நூறு பெண்கள் மயங்குவார்களே... நானே சமயத்தில் உன்னைப் பார்க்கையில் ஏன் பெண்ணாகப் பிறக்காது போனோம் என நினைத்திருக்கிறேன்... நீ இப்படி நிறப் பாகுபாடு பார்த்ததாக எனக்கு நினைவே இல்லையேடா மச்சி.. சொல்லு.. என்னதான் நடக்குது உள்ளுக்குள்ளே....” என கண்ணனின் நெஞ்சைத் தொட்டுக் காட்டிக் கேட்டான்.

அவன் குரலும், செய்கைகளும் கண்ணனுக்குக் குமார் கேட்பது என்ன எனப் புரியவைக்கத் தான் செய்தது.. “ ச்சு.. குமார்.. அப்படியேதும் இல்லப்பா.. ஆனால், அந்தப் பொண்ணு ஏன் என்கிட்டே இப்படி எரிஞ்சு விழறா எனப் புரிய மாட்டேங்குது.. என் சிரிப்புதானே.. அதைப் பார்த்தால்தான் இன்னும் கத்தறாளோ என இருக்கு.. என்னவோ போ..” என்று சலித்துக் கொண்டான்..

“ சரி.. சரி.. இதைப் பிறகு பார்ப்போம்.. இப்போ வேலையை பார்ப்போம்..” என்று பேச்சை முடித்தான் குமார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------


“ஓ.. அப்படியா.. இதோ வருகிறேன்.. தளத்திலிருந்து இருவரும் காரில் வந்து கொண்டிருக்கையில் விபத்தா..!? அடி பலமா..!? ஓ.. நீங்கள், அவர்கள் இருவருடன் மருத்துவமனையிலேயே இருங்கள் சார்.. இதோ, நான் கிளம்பி விட்டேன்...” உதயன் அலைபேசியை வைத்துவிட்டு, கீதாவை அழைத்து,

“கீதா.. நம்ம மேஸ்திரி தான் பேசினார். நம் குமாரும்.., கண்ணனும் தளத்திலிருந்து வருகையில்..” என சொல்லத் துவங்க, அவனின் அலைபேச்சை ஏற்கனவே கவனித்திருந்த கீதா.., “ அச்சோ.. என்ன சார்.. கண்ணனுக்கு விபத்தா.. அடி பலமா சார்.. மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டதா சார்..!? சார்.. என்ன சார்.. பதில் சொல்லுங்கள் சார்.. கண்ணனுக்கு அடி என்றுதானே போன்..!?” என்று பதட்டமாகக் கேட்டுக் கொண்டே போக, உதயன், சிறு முறுவலோடு அவளைக் கூர்ந்து நோக்கினான்.

“ஹூம்... இல்லை சிஸ்டர்.. கண்ணன் கொடுத்து வைத்தவன். குமாருக்கு அந்த பாக்கியம் இல்லை பாருங்கள்.. குமாருக்குதான் கையில் பலத்த அடியாம். கண்ணனுக்கு லேசாய் சிராய்ப்புகள்தானாம்.. இத்தனை அக்கறை கிடைக்குமானால் கை காலை உடைத்துக் கொண்டு படுத்துக் கொள்ளலாமே... சரிதான்.. நீங்கள் கண்ணனை நேரில் பார்க்கும் வரை திருப்தி அடைய மாட்டீர்கள். வாருங்கள். போய், குமார் அடிபட்டிருப்பதையும், கண்ணன் மாட்டிக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம்..”

“ கண்ணன் மாட்டிக் கொண்டாரா.. என்ன சார் சொல்றீங்க..!? “

“ம்.. ஆமாம் தங்கச்சிகிட்டே மாட்டிக்கிட்டானில்லே.. அதை அவனிடம் சொல்லி, அவன் என்ன நெளி நெளிகிறான் எனப் பார்க்க வேண்டாமா... வாங்க.. வாங்க.. சீக்கிரமாய் போவோம்..”

அப்போதுதான் மெல்லத் தன் உள்ளம் உணர்ந்து பூவாய் மலர்ந்தாள் கீதா.

கீதா, கண்ணன் பெயர் பொருத்தம் நன்றாகதான் இருக்கு.. இல்லையா..!?